Saturday, November 5, 2011

ரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல்

சென்னை, ரங்கநாதன் தெருவில் முறையற்றதாகப் பல கடைகள் இயங்கிவருகின்றன. தெரிந்தே வரம்புகளைமீறி, அதிக மாடிகள் கொண்ட கட்டடங்களைக் கட்டுவது, போவோர் வருவோருக்கான பாதையை மறித்து பொருள்களை ஏற்றி இறக்கும் வண்டிகளைக் கொண்டுவருவது, வாகன நிறுத்தங்களைச் செய்துதராது இருப்பது, தீக்கு எதிரான பாதுகாப்பு ஏதும் இல்லாதது, நெரிசல்-தள்ளுமுள்ளு (ஸ்டாம்பீட்) பிரச்னைகளிலிருந்து மக்களைக் காக்க வழிமுறைகளைச் செய்யாதிருப்பது என்று பல முறைகேடுகள்.

அவ்வப்போது சென்னை பெருநகரக் குழுமம் சீல் வைக்கிறேன் என்பார்கள். பெட்டிகள் கைமாறியோ, கோர்ட்டுக்குப் போயோ அந்தக் கெடு நகர்த்தப்படும். இப்போது சீல் வைத்திருக்கிறார்கள் கடைகளுக்கு. 25 கடைகள் என்கிறது ரிப்போர்ட்.
அந்தக் கடைகளில் வேலை செய்வோருக்கு அடுத்த மாதம் சம்பளம் கிடைக்குமா கிடைக்காதா என்பதை முன்வைக்கிறது ஹிந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை. இந்தமாதிரி இரக்கத்தைத் தூண்டும் விதமாகவா, திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யலில் கலப்பது தொடர்பான செய்தி எழுதப்படுகிறது? குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கும் இடங்களில் இதேமாதிரியான இரக்கம் எடுபடுமா? ஐயோ பாவம் குழந்தைகள், இங்கு கிடைக்கும் பணம்கூட இல்லாமல் அவர்கள் பிச்சை எடுக்கத்தான் போகவேண்டியிருக்கும் என்று சொல்கிறோமா?
இப்படி எங்கெல்லாம் முறைகேடாக நிறுவனங்கள் இயங்குகின்றனவோ, அங்கெல்லாம் ஏழைகள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முதல்வர்தான் தலையிடவேண்டும் என்ற கூப்பாடு எழுகிறது. இம்மாதிரியான அபத்தமான வேண்டுகோள்களுக்குத் தலைசாய்க்காமல், மிகவும் கடுமையுடனும் கண்டிப்புடனும் இவர்களிடம் நடந்துகொள்ளவேண்டும்.
சட்டம் என்றால் கிள்ளுக்கீரை என்று நடந்துகொள்கிறார்கள் இவர்கள். இவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கப்படவேண்டும். அப்படி நடக்குமா என்பதில் எனக்கும் பிறரைப்போலவே சந்தேகம் உள்ளது. ஏதோ சில பேட்ச் அப் நடந்து, விதவிதமான செட்டில்மெண்ட் முடிந்து, மீண்டும் பழையபடி ஜாம் ஜாம் என்று பிசினஸ் நடக்கும் என்று அனைவரும் பேசிக்கொள்கிறார்கள். இம்முறையும் அப்படியே நடந்தால் அது மிகவும் சோகமான ஒன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment