Saturday, April 7, 2012

சேலத்தைக் கலக்கும் பன்முக கலெக்டர்..

சேலத்தைக் கலக்கும் பன்முக கலெக்டர்..
'வடிவேலு கணக்காப் பேசிச் சிரிக்கவைக்கிறார். அதே நேரம், தப்பு செய்ற அதிகாரிகளையும், பொதுமக்களை மதிக்காத அரசு ஊழியர்களையும் விஜயகாந்த் கணக்கா விளாசித் தள்றார்...'' - சேலம் மாவட்ட டீக் கடைகளில் நான்கு பேர் ஒன்றாகக் கூடினால் இதுதான் பேச்சு. சேலம் கலெக்டர் மகரபூஷணத்துக்குத்தான் மக்கள் மத்தியில் இப்படி ஒரு ஹீரோ இமேஜ்.
சில தினங்களுக்கு முன், கலெக்டரின் செல்போன் அலறியிருக்கிறது. அதை எடுத்துப் பேசியவர், ''விஷயத்தை எல்லாம் சொன்னியா? சொல்லியுமா உள்ளே விடல. யாரு அவன்? அங்கே வேலை பார்க்குறானா? கலெக்டர் பேசுறேன்னு அவன்கிட்ட போனைக் கொடு...'' என்று டென்ஷன் ஆனார். சற்று நேரத்துக்குப் பிறகு, ''சரி.. அவன் வாங்கலைன்னா பரவாயில்ல. நீ நேரா உள்ளே போய் தாசில்தார்கிட்ட போனைக் கொடு...'' என்று சொன்னார்.

''என்னது கதவு சாத்தி இருக்கா... டவாலியும் விட மாட்டேன்னு சொல்றானா?'' என்று டென்ஷன் ஆனவர், ''நீ லைன்லயே இரு...'' என்று சொல்லிவிட்டு, இன்னொரு போனை எடுத்து, ''மேட்டூர் தாசில்தாரை உடனே என் லைனுக்கு வரச் சொல்லுங்க..'' என்று உத்தரவு போட்டிருக்கிறார். அடுத்த நிமிடம் மேட்டூர் தாசில்தாரிடம் இருந்து போன். ''நான் கலெக்டர் பேசுறேன். கதவை சாத்திவெச்சுக்கிட்டு நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே? வெளியே என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியாதா? உன் ரூமுக்கு வெளியே ஒரு பையன் நிற்கிறான். அவனை உள்ளே கூப்பிட்டு அவன் கேட்கிற இடத்துல கையெழுத்துப் போட்டுக் கொடு. அந்தப் பையனை உள்ளே விட மாட்டேன்னு சொன்ன ரெண்டு பேரையும் சஸ்பெண்ட் பண்ணிட்டு என்னை வந்து பாரு...'' என்று சொல்லிவிட்டு போனை வைத்திருக்கிறார்.

நடந்த விஷயத்தை அவரே சொல்கிறார்... ''ஆறுமுகம்னு இளைஞர் ராணுவத்துக்குத் தேர்வாகி இருக்கார். நாளைக்கு டியூட்டியில ஜாயின் பண்ணனும். அதற்கான குடியிருப்புச் சான்றிதழும், நன்னடத்தைச் சான்றிதழும் வாங்க மேட்டூர் தாசில்தார் ஆபீஸுக்குப் போயிருக்கார். தாலுக்கா ஆபீஸுக்குள்ள விடாம அவரை டார்ச்சர் பண்ணி இருக்காங்க. மக்களுக்கு சேவை பண்ணத்தானே இப்படி ஊருக்கு ஒருத்தரை அரசாங்கத்துல உட்கார வெச்சு இருக்காங்க. கதவைச் சாத்திக்கிட்டு என்ன பண்ணுவாங்களோ தெரியலை. இவங்களை எல்லாம் சும்மா விடக் கூடாதுங்க'' என்று சொன்னார்.

ஜமாய்ங்க சாரே!

1 comment: